சனி, 13 அக்டோபர், 2012

தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்

கோவில் குளம் என்றதும், நம் நினைவுக்கு வருபவை திருவாரூர் கமலாலயமும், மதுரை பொற்றாமரைக் குளமும் தான்.

அதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் என்றாலே, தெப்பக்குளத்தோடு கூடிய கோபுரக் காட்சி தான் நினைவில் நிழலாடும்.
துள்ளி விளையாடும் மீன்களையும், அள்ளக் குறையாத தகவல்களையும் தன்னுள் அடக்கியபடி, மயிலாப்பூர் தெப்பக் குளம் மவுனமாக காட்சியளிக்கிறது.



திருக்கோவில் தலபுராணங்களில், இத்திருக்குளம், சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என இரு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

திருமயிலை உலா என்ற நுாலிலும், `பொற்கோவிலும் மதிலும் புண்டரிகப் பூந்தடமும்' என இத்திருக்குளம் குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய இடத்தில், இந்த கபாலீசுவரர் கோவில், 1672ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இருக்கிறது. அதற்கும் முன்பே இந்தக் குளம் இங்கிருந்திருக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1798ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியால் வரையப்பட்ட, `மேப் ஆப் மெட்ராஸ்' என்ற நிலப்படத்தில் இக்குளம் இடம் பெற்றுள்ளது.

1910ல் திருப்பணி

குளத்தின் நடுவில் அழகிய ஆழி மண்டபம் உள்ளது. கிழக்குக் கரையில் உள்ள மண்டபத்தில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, கற்பகாம்பாள் காட்சி தருவார்.

பங்குனிப் பெருவிழாவின் மூன்றாம் நாளன்று, திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டும் விழா, தெற்குக் கரையின் நடுவில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நடக்கும்.

மேற்குக் கரையில் எட்டுக் கால் மண்டபம் உள்ளது.  அதன் அருகில், இரு புறமும் இரு சிறு மண்டபங்கள் உள்ளன.

பங்குனிப்  பெருவிழாவின் எட்டாம் நாளான அறுபத்து மூவர் விழாவன்று, சம்பந்தர் மற்றும் பூம்பாவையின் தந்தை சிவநேசச் செட்டியார் ஆகியோரின் திருமேனிகள், இந்த சிறு மண்டபங்களில் வைக்கப்பட்டு, நீராட்டு நடக்கும்.
இதற்கான கல்வெட்டுகளும், இந்த மண்டபங்களில் மேல் பகுதியில் உள்ளன. வடக்கில் உள்ள மண்டபத்தில் சிவலிங்கமும், நந்தியும் உள்ளன.

புதைந்த ஜ்யேஷ்டா தேவி

மேற்குக் குளக்கரையில் எட்டுக் கால் மண்டபம் அருகில்,ஜ்யேஷ்டா தேவி கற்சிலை, இன்றும் வேப்பமரத்தடியில், பாதி புதைந்த நிலையில் இருக்கிறது.

மயிலாப்பூரில் உள்ள ஜ்யேஷ்டா தேவி சிலை 


இதுகுறித்து, வரலாற்றாய்வாளர் மா.ராசமாணிக்கனார் தமது, `திருமயிலைக் கபாலீச்சரம்' என்ற கட்டுரையில் குறிப்பிடுகையில், இது பழைய கபாலீச்சரத்தில் இருந்தது, கி.பி.,7ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது' எனத் தெரிவித்துள்ளார்.

பலகைச் சிற்பமான இந்த ஜ்யேஷ்டா தேவி, தனது வலக்கையில் காகச் செங்கோலையும், இடக்கையில் துடைப்பமும் ஏந்தியிருக்கிறார்.

இவரது மகன் நந்திகேசுவரனும், மகள் அக்கினிமாதாவும் இருபுறமும் உள்ளனர். ஆனால், முக்கால்வாசி சிலை, மண்ணில் புதைந்திருப்பதால், யார் எந்தப் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை.

சதுர வடிவில் அமைந்த இக்குளத்திற்கு, 1910ம் ஆண்டில் கல்லால் ஆன படிக்கட்டுகள் அமைக்கும் பணி துவங்கியது.

இப்பணியில், பலர் ஈடுபட்டு, தங்கள் பங்கை அளித்துள்ளனர். இவர்கள் தங்கள் பணியை, கல்வெட்டு மூலமும் குளக்கரையில் பதிவு செய்துள்ளனர்.

இனியாவது காப்போம்

நகரமயமாக்கலின் பெரும் தீங்கு, நீர் நிலைகள் காணாமல் போவதுதான்.சென்னையிலும் அதைச் சுற்றிலும் இருந்த ஏராளமான குளங்கள், ஏரிகள், குட்டைகள் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் குறைந்ததற்கு, நகரமயமாக்கலும், மோசமான நீர் மேலாண்மையும் தான் காரணம்.

நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட போதும் வளங்களைப் பராமரிப்பது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

ஆனால், நவீன கருவிகள் இல்லாத முற்காலத்தில், இயற்கையோடு இயைந்து வாழ்வதில் பெரும் அக்கறை காட்டினர் நம் முன்னோர்கள்.

ஒவ்வொரு ஊரிலும்‌, அந்த ஊரின் பயன்பாட்டிற்காகவும், கோவிலின் பயன்பாட்டிற்காகவும் இரு குளங்கள் இருக்கும்.

தமிழகத்தில் கோவிலும் குளமும் ஒன்று சேர்ந்த இல்லாத ஊர்களே இல்லை எனலாம். மாங்குளம், செங்குளம், கருங்குளம், பெருங்குளம், பெரியகுளம் என, குளம் என்ற பெயரில் முடியும் ஊர்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன.
பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள், நமக்கு நீர்நிலைகளின் மகத்துவத்தை மீண்டும் உணர்த்தி வருகின்றன. இருக்கும் நீர்நிலைகளை இனியாவது காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate